

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர்-லக்னெள இடையிலான புதன்கிழமை சென்ற ரயிலில் ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டது. வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.
இந்திய ரயில்வே வரலாற்றில் ரயில் பயணத்தில் திருமணம் நடைபெற்றது இதுவே முதல் முறையாகும்.
இந்த ரயிலில் தனது அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக வாழும் கலை அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், 'உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மருந்தாளுநர் சச்சின் குமார் என்பவருக்கும், வரித்துறையில் பணிபுரியும் ஜோத்சனா சிங் படேல் என்ற பெண்ணுக்கும் ஓடும் ரயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் திருமணம் செய்துவைத்தார்.
திருமணம் என்பது ஆடம்பரமாக இருக்கக் கூடாது. எளிமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது சிலர் லட்சக்கணக்கில் ஆடம்பரமாக செலவு செய்கின்றன. சிலர் திருமணத்துக்காகவே கடன் வாங்குகிறார்கள். இவை தவிர்க்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் திருமணம் நடத்தப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டது.
திருமணம் செய்து கொண்ட தம்பதி வாழும் கலை அமைப்பைச் சேர்ந்தவர்களா என்பது தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் இந்த திருமணம் குறித்த செய்தியும், படங்களும் சுட்டுரையில் (டுவிட்டர்) பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரது பக்கங்களில் இணைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.