பிகாரில் காங்கிரஸ் சட்ட மேலவை உறுப்பினர்கள் (எம்எல்சி) 4 பேர், அக்கட்சியில் இருந்து விலகி ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தனர். அவர்களில் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அசோக் செளதரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்எல்சிக்கள் நால்வரும் முதல்வர் நிதீஷ் குமாரை மாநிலத் தலைநகர் பாட்னாவில் வியாழக்கிழமை சந்தித்தனர். முறைப்படி, அவர்கள் அப்போது ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிகாரில் அடுத்த சில நாள்களில் 2 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும், ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இத்கைய முடிவை எம்எல்சிக்கள் எடுத்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 6 எம்எல்சிக்களும், 27 எம்எல்ஏக்களும் உள்ளனர். அவர்களில் அசோக் செளதரி, திலீப் செளதரி, ராமசந்திர பாரதி, தன்வீர் அக்தர் ஆகிய 4 பேரும் தற்போது நிதீஷ் கட்சியில் இணைந்துள்ளனர். தங்களை ஐக்கிய ஜனதா தள எம்.பி.க்களாக அங்கீகரிக்கக் கோரி மாநில சட்ட மேலவைத் தலைவர் ஹரூன் ரஷீத்திடம் அவர்கள் கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தனர். அதனை ஏற்றுக் கொள்வதாக ஹரூன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் தலைவர் கெளகப் காத்ரி, கட்சியின் பிற எம்எல்ஏக்களும், எம்எல்சிக்களும் தங்களது வசம் இருப்பதாகக் கூறினார். ஆனாலும், மேலும் இரு எம்எல்ஏக்கள் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியிருப்பதாகத் தெரிகிறது. தாங்கள் காங்கிரஸில் நீடிப்போமா? அல்லது வேறு கட்சியில் இணைவோமா? என்பதை காலம்தான் முடிவு செய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.