

புது தில்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்ஸி மருத்துவமனையில் விபத்தில் சிக்கி துண்டிக்கப்பட்ட காலை, நோயாளிக்கு தலையணையாக வைத்த சம்பவத்தில் 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஜான்சி அரசு மருத்துவமனையில், ஒரு இளைஞரின் கால் துண்டிக்கப்பட்ட நிலையில், அதை அவருக்கு தலையணையாக வைத்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் நேற்று வேகமாகப் பரவியது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்துக்கு செய்தி பறந்தது.
உடனடியாக விசாரணை நடத்திய மருத்துவமனை நிர்வாகம், சம்பவத்தின் போது பணியில் இருந்த 2 மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்தும், 4 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது என்னவென்றால், 28 வயதான ஞானஷ்யாம் என்ற இளைஞர் மிக மோசமான பேருந்து விபத்தில் சிக்கி காலில் அடிபட்டது. அவரது உயிரைக் காப்பாற்ற காலை வெட்டி எடுத்தனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்தபோது, வெட்டி எடுத்த காலை தலையணையாக வைத்திருந்தனர்.
இதனைப் பார்த்த உறவினர்கள், ஊழியர்களிடம் பல முறை தலையணை தருமாறு கோரியும் அவர்கள் கண்டுகொள்ளாததால், அருகில் உள்ள கடைக்குச் சென்று தலையணை வாங்கி வந்து வைத்துள்ளனர்.
முன்னதாக காலை தலையணையாக வைத்திருந்த புகைப்படத்தை பொதுமக்கள் புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்ததால் இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.