
புதுதில்லி: சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பான வழக்கில் விரிவான வாதங்களுக்குப் பிறகு தீர்ப்பை ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியான லோயா, கடந்த 2014, டிசம்பர் 1-ஆம் தேதி நாகபுரியில் சக நீதிபதியின் மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது திடீரென மரணமடைந்தார். மாரடைப்பால் அவர் மரணடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தொடர்புடைய சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்து வந்த நிலையில், அவர் மரணடைந்ததால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
இதனிடையே, லோயா மரணம் தொடர்பாக சுதந்திரமான அமைப்பின் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, பொதுநல வழக்குகளுக்கான மையம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவானது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களாவது:
லோயாவின் இசிஜி உள்ளிட்ட பரிசோதனை அறிக்கைகள், அவரது மரணத்துக்கு மாரடைப்பு காரணம் இல்லை என்று குறிப்பிடுகின்றன. பல்வேறு இதயவியல் நிபுணர்களின் கருத்தும் மாரடைப்பால் அவர் இறந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிவிக்கிறது.
அப்படியென்றால், விஷம் கொடுக்கப்பட்டதால் லோயா ஏன் மரணமடைந்திருக்கக் கூடாது? உடலுக்குள் செல்லும் விஷம், இதயத்துக்கு ரத்தம் பாய்வதை தடுக்கும். இதனால் நெஞ்சு வலி ஏற்படும். சம்பவத்தன்று, தனக்கு நெஞ்ச வலிப்பதாக லோயா கூறியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறெல்லாம் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பான வழக்கில் விரிவான வாதங்களுக்குப் பிறகு தீர்ப்பை தற்பொழுது ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.