
நாட்டில் சர்வாதிகார ஆட்சியை திணிக்க பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் முயற்சித்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார். மேலும், கூட்டாட்சி அமைப்பை அழிப்பதே அவர்களின் பிரதான நோக்கம் என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக கர்நாடக மாநிலம், மங்களூருவில் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் புதன்கிழமை கூறியதாவது:
பாஜக தலைமையிலான மத்திய அரசு, நமது நாட்டில் 'ஒரே வரலாறு, ஒரே மொழி, ஒரே வாழ்க்கை முறை' என்ற சிந்தாந்தத்தை திணிக்க முயற்சிக்கிறது. இது, இந்திய கலாசாரத்துக்கும் நாட்டின் அடையாளமாக உள்ள பன்முகத்தன்மைக்கும் ஆபத்தானது.
கர்நாடக வரலாற்றிலேயே மோசமான ஆட்சி பாஜக ஆட்சிதான். அவர்களது ஆட்சியில் மூன்று முறை முதல்வர்கள் மாற்றப்பட்டனர். மாநிலத்தின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை. இப்போது சித்தராமையாவை விமர்சித்துதான் அவர்கள் பிரசாரம் செய்கிறார்கள். ஏன் தங்களது சாதனைகளைச் சொல்லி பிரசாரம் செய்யவில்லை?
கர்நாடகத்தின் வழியாக தென்னிந்தியாவுக்குள் நுழைய பாஜக முயற்சிக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் தென்னிந்தியாவின் பன்முகத்தன்மை ஆபத்துக்குள்ளாகிவிடும்.
மோடி மீது சாடல்: பிரதமர் மோடி, தனது பதவிக்குரிய கண்ணியத்துடன் பேச வேண்டும். பாஜக செய்தித் தொடர்பாளர் போல அவர் பேசக் கூடாது. இந்திய ராணுவத்தின் பெருமைமிகு தளபதிகளான கரியப்பா, திம்மய்யா தொடர்பாக தனது பிரசாரத்தில் பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் தவறானவை.
பெட்ரோல், டீசலை சரக்கு-சேவை வரி விதிப்பின்கீழ் கொண்டு வர வேண்டும். ஆனால், மக்களிடம் கொள்ளையடிக்க விரும்புவதால், மத்திய அரசு அதனை செய்யாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவற்றின் விலையை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்த நாடும் கர்நாடக தேர்தலையே ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறது. கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தொடங்கிய வளர்ச்சிப் பணிகள் நீடிக்க வேண்டுமெனில் காங்கிரஸுக்கு மக்கள்ஆதரவளிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு ரூ.6,43,292 கோடியில் இருந்து ரூ.9,49,111 கோடியாக அதிகரித்துள்ளது. இது 8 சதவீத வளர்ச்சியாகும்.
இதேபோல், கர்நாடகத்தின் சராசரி தனி நபர் வருமானமும் 1.25 சதவீதம் அதிகரித்துள்ளது. இது இந்திய அளவில் பெரும் சாதனையாகும். மேலும், நாட்டிலேயே வேலைவாய்ப்பின்மை வீதமும் (2.6%) கர்நாடகத்தில்தான் குறைவாக உள்ளது. பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்பு வீதம் குறைந்துள்ளதுடன், மாநிலத்தில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







