

துமகுரு: நடக்கும் தெய்வம் என்று அழைக்கப்படும் 111 வயது ஸ்ரீ ஷிவக்குமார சுவாமிஜி, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்தினார்.
ஏராளமானோருக்கு முன்னுதாரணமாக விளங்கும் சுவாமிஜி, இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தல் முதல் மக்களவைத் தேர்தல் வரை ஒரு தேர்தலைக் கூட புறக்கணிக்காமல், ஒவ்வொரு முறையும் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.
தான் வாக்களிக்க விரும்பும் வேட்பாளருக்கு தனது வாக்கினை செலுத்தி விடுவார். இந்த தள்ளாத வயதிலும் அவர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார்.
ஒவ்வொரு தேர்தலின் போதும், தனது பூஜைகளை அதிகாலையிலேயே தொடங்கி விரைவாக முடித்துவிட்டு, தனக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வாக்களிக்க வந்து வரிசையில் நின்றுவிடுவார் சுவாமிஜி. ஆனால், இந்த தேர்தலில் முதல் முறையாக, வயோதிகம் காரணமாக அவ்வளவு விரைவாக வாக்குச்சாவடிக்கு வரமுடியவில்லை.
தனது சிஷ்யர்களுடன் 10.15 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை செலுத்தினார். சுதந்திர இந்தியாவில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தனது வாக்கினை செலுத்தி, ஒரு சாதனையை அவர் படைத்துள்ளார்.
இது குறித்து அவரது மடத்தின் அதிகாரி கூறுகையில், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடந்த தேர்தல்களில் வரி செலுத்துவோருக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்தது. அப்போதும் சுவாமிஜி தனது வாக்கினை செலுத்தியுள்ளார் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.