கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஏற்பட்ட பரபரப்பு, மாநில முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்றுக் கொண்டதால் மேலும் மும்முரமாகியுள்ளது.
தனிப்பெரும்பான்மை பெறாத பாஜகவை, கர்நாடகாவில் ஆட்சியமைக்க அழைத்திருக்கும் கர்நாடக மாநில ஆளுநர் வஜுபாய் வாலா, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பா அரசுக்கு 15 நாட்கள் அவகாசமும் அளித்துள்ளார்.
அதிக பெரும்பான்மை கொண்ட ஒரு கட்சியை முதலில் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று சர்காரியா ஆணையம் பரிந்துரைத்ததாகவும், அதன் பேரிலேயே, பாஜகவை ஆட்சியமைக்க அழைத்ததாகவும் தனது செயலுக்கு விளக்கமும் அளிக்கிறார் வஜுபாய் வாலா. மேலும், முதல்வராக பதவியேற்கும் நபர் சட்டப்பேரவையில் அடுத்த 30 நாட்களுக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதும் விதி.
இதேபோல, கடந்த காலங்களில் தனிப்பெரும்பான்மை பெறாத கட்சியை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநர்கள் அவர்களுக்கு அளித்த கால அவகாசங்களை பார்க்கலாம்.
1998
உத்தரப்பிரதேசத்தில் ஜக்தாம்பிகா பால் ஆட்சியமைத்து, பெரும்பான்மையை நிரூபிக்க 3 நாட்கள் அவகாசம் பெற்றார்.
2005
ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவரும், முன்னாள் முதல்வருமான ஷிபு சோரென், முதல்வராக பதவியேற்று பெரும்பான்மையை நிரூபிக்க 19 நாட்கள் அவகாசம் பெற்றார்.
2017
கோவாவின் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட மனோகர் பாரிக்கருக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் உச்ச நீதிமன்றம் சென்று, அவகாசத்தை 48 மணி நேரமாகக் குறைத்தது நினைவில் கொள்ளத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.