"கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலுக்காக ரூ.6,500 கோடியை பாஜக செலவிட்டுள்ளது' என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
உலகிலேயே மிகப்பெரும் பணக்கார அரசியல் கட்சியாக பாஜக உள்ளது. கர்நாடகத் தேர்தலில் சுமார் ரூ.6,500 கோடியை பாஜக செலவிட்டுள்ளது. இந்த பணம் எங்கு இருந்து வந்தது என்பது குறித்து பாஜக விளக்கம் அளிக்க வேண்டும். சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஆதரவுக்கு, அரசு அமைப்புகளையும், பணபலத்தையும் தவறாக பாஜக பயன்படுத்தியது. இதுகுறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கர்நாடகத்தில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக நடந்து கொண்டதற்கு, நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும். கர்நாடக தேர்தல் முடிவானது, பாஜகவுக்கு ஆதரவாக கிடைக்கவில்லை. ஆனால், அக்கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதை சுயநல நோக்கத்துடன் பாஜகவும் ஏற்றது.
கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது, அரசியல் கண்ணியத்தை பிரதமர் தரம்தாழ்த்தி விட்டார்.
பிரசாரத்தின்போது பேசிய வார்த்தைகளில் இருந்து தாம் வகிக்கும் பதவியையும் அவர் தரம்தாழ்த்தி விட்டார். இந்தியப் பிரதமராக இதற்கு முன்பு இருந்தவர்கள் யாரும், மோடியை போல் மோசமாக பேசியதில்லை.
தேர்தல் பிரசாரத்தில் பாதி பொய்-பாதி உண்மைகளை கூட மோடி தெரிவிக்கவில்லை. அவர் பேசியது அனைத்தும் பொய்களே. இதனால்தான் பாஜக தோற்று விட்டது. பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெறவில்லை. ஆனால், அதேநேரத்தில் கடந்த தேர்தலைக் காட்டிலும், இத்தேர்தலில் காங்கிரஸýக்கு 2 சதவீத வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளன.
தேர்தலின்போது மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது.
எனவே, மத்தியில் பாஜக கூட்டணி அரசு அமைந்து 4 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடுவதற்குப் பதிலாக, நாட்டு மக்களுக்கு மோடி பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்றார் அனந்த் சர்மா.