

வங்கி மோசடி.. இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் புரட்டிப் போட்டிருக்கும் வார்த்தை. எத்தனை ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாடிய தொழிலதிபர்களின் அடையாளமாக மாறிய சொல்.
சாதாரண செல்வந்தர்கள், கோடீஸ்வரர்களாக வங்கிகள் தேடிச் சென்று கொடுத்த கடன் தொகையை மோசடி செய்துவிட்டு, வெளிநாடுகளுக்கு உல்லாசமாக தப்பியோடி தலைமறைவானவர்களைப் பற்றிய செய்திகள் நாள்தோறும் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.
இந்தியாவில் செயின் பறிப்பு, கொள்ளை, திருட்டு போல, வங்கி மோசடியும் ஒரு சாதாரணக் குற்றமாக மாறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. (ஏற்கனவே மாறிவிட்டது)
இந்தியாவில் 2017-18ம் நிதியாண்டில் மட்டும் 21 வங்கிகள் சுமார் 26 ஆயிரம் கோடி பணத்தை இப்படி செல்வந்தர்களுக்கு கொடுத்து ஏமாந்துபோயுள்ளது.
இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரை கடன்பெற்று ஏமாற்றியவர்களின் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்,21 வங்கிகள் ரூ.26 ஆயிரம் கோடி அளவுக்கு ஏமாந்துள்ளது என்றால், இதில் பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டுமே 6 ஆயிரம் கோடி அதாவது மோசடித் தொகையில் கால்பங்கு தொகையை இழந்திருப்பதுதான்.
சரி.. வாருங்கள் அந்த பட்டியலைப் பார்த்து பெரு மூச்சு விடுவோம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி - ரூ.6,461.13 கோடி
ஸ்டேட் பேங்க் - ரூ.2,390.75 கோடி
பாங்க் ஆப் இந்தியா - ரூ.2,224.86 கோடி
பாங்க் ஆப் பரோடா - ரூ.1,928.25 கோடி
அலகாபாத் வங்கி- ரூ.1520.37 கோடி
ஆந்திரா வங்கி - ரூ.1,303.30 கோடி
யுகோ வங்கி - ரூ.1,224.64 கோடி
ஐடிபிஐ வங்கி - ரூ.1,116.53 கோடி
யூனியன் பாங்க் ஆப் இந்தியா - ரூ.1,095.84 கோடி
சென்ட்டிரல் பாங்க் ஆஃப் இந்தியா - ரூ.1,084.50 கோடி
மகாராஷ்டிரா வங்கி - ரூ.1,029.23 கோடி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - ரூ.1,015.79 கோடி
கார்ப்பரேஷன் வங்கி - ரூ.970.89 கோடி
யுனைட்டட் பாங்க் ஆப் இந்தியா - ரூ.880 கோடி
ஓபிசி - ரூ.650.28 கோடி
சின்டிகேட் வங்கி - ரூ.455.05 கோடி
கனரா வங்கி - ரூ.190.77 கோடி
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி - ரூ.90.01 கோடி
தேனா வங்கி - ரூ.89.25 கோடி
விஜயா வங்கி - ரூ.28.58 கோடி
இந்தியன் வங்கி ரூ.24.23 கோடி
இந்த 21 வங்கிகளும் ஏமாந்த மொத்த கடன் தொகை ரூ.25,774.78 கோடிகள் மட்டுமே.
ஒரு கல்விக் கடனுக்கும், சிறு, குறு தொழில் கடன்களுக்கும் பொதுமக்கள் அலையோ அலை என அலையவிடும் வங்கிகள், எப்படி இவ்வளவுத் தொகையை கடனாகக் கொடுத்து ஏமாந்துள்ளது என்று உங்களுக்கு எழும் சந்தேகத்தை கேள்வியாகக் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்டால், உங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லை என்று கூறி, இருக்கும் பணத்தை அபராதமாக வசூலித்துவிடுவார்கள் ஜாக்கிரதை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.