கர்நாடகத்தில் தேர்தலுக்கு பின்பான காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து அம்மாநில முதல்வராக மஜத தலைவர் குமாரசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை அமைப்பதில் தொடர் சிக்கல் நீடித்து வருவதால் இந்த இரு கட்சிகளிடையே தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தான் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே கடன்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மையுடன் என்னை வெற்றிபெறச் செய்யுங்கள் என தேர்தல் பிரசாரத்தின் போது கர்நாடக மக்களிடத்தில் கோரிக்கை வைத்தேன். ஆனால், அவ்வாறு ஆட்சி அமைக்கும் பலம் என்னிடம் இல்லை. இங்கு நான் 6 கோடி கர்நாடக மக்களின் ஆதரவால் ஆட்சி அமைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் தயவு காரணமாகவே கர்நாடக முதல்வராகியுள்ளேன்.
ஒரு முதல்வராக எனது பணியை நான் செய்ய வேண்டும். இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும். இருப்பினும், நான் காங்கிரஸ் கட்சிக்கு கடன் பட்டுள்ளதால், அக்கட்சியின் தலைவர்களிடம் அனைத்து விவகாரங்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. அவர்களுடைய ஆதரவு இல்லாமல் என்னால் எதுவும் செய்ய இயலாது என்றார்.