ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ப.சிதம்பரம் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்காக ஆஜராகுமாறு சிபிஐ அவருக்கு நேற்று சம்மன் அனுப்பியது.
அதே சமயம், ப.சிதம்பரம் இதே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிமன்றத்தில் இன்று விசராணைக்கு வருகிறது.
சிபிஐ முன் இன்று விசாரணைக்காக ஆஜராகும் போது அவர் கைது செய்யப்படலாம் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முன்ஜாமீன் மனுவை சிதம்பரம் தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.
அதனால், இந்த வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்குமா அல்லது சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதை சிதம்பரம் தவிர்ப்பாரா என பரபரப்பு நிலவி வருகிறது.
2007-இல் சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக செயல்பட்டு வந்தார். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இந்த வழக்கில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டதாக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, கார்த்தி சிதம்பரம் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.