போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது

உத்தரப் பிரதேச மாநிலம், கோமதி நகரில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன அதிகாரி விவேக் திவாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது
Updated on
2 min read


லக்னௌ: உத்தரப் பிரதேச மாநிலம், கோமதி நகரில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன அதிகாரி விவேக் திவாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில், விவேக் திவாரியின் உடலில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு காயத்தால்தான் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவேக் திவாரி மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, திவாரியின் கார் தாறுமாறாகச் சென்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த விவேக் திவாரி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் 2.25 மணிக்கு உயிரிழந்தார். அவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் உயிரிழந்தாரா அல்லது விபத்தில் சிக்கியதால் உயிரிழந்தாரா என்று காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் பிரேத பரிசோதனை அறிக்கை, வழக்குப் பதிவுக்கு முக்கியமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கோமதி நகரில் காரை நிறுத்தாமல் சென்ற ஆப்பிள் நிறுவன அதிகாரி விவேக் திவாரியை ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சந்தேகப்பட்டு சுட்டனர். இதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து இந்த விவகாரத்தில் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், முதல்வரை சந்தித்து பேச வேண்டும் என்றும் திவாரியின் குடும்பத்தினர் வலியுறுத்தி வந்தனர். அதனால் திங்கள்கிழமை முதல்வரை அவர்கள் சந்தித்தனர்.

திவாரியின் மனைவி கல்பனா, இரு பெண் குழந்தைகள் மற்றும் உறவினர்களை அவர்களது வீட்டுக்குச் சென்று அந்த மாநிலத்தின் துணை முதல்வர் தினேஷ் சர்மா முதல்வரை சந்திக்க அழைத்து வந்தார். அதன் பின்னர் திவாரியின் குடும்பத்தினர் முதல்வர் ஆதித்யநாத்தை சந்தித்தனர். முதல்வரை சந்தித்த பின்பு திவாரியின் மனைவி கல்பனா செய்தியாளர்களிடம் பேசுகையில்,  மாநில அரசு மீது எனக்கு நம்பிக்கை உள்ளதாக முன்னரே தெரிவித்திருந்தேன். முதல்வரை சந்தித்த பின்பு அந்த நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. எனது அனைத்து கோரிக்கைகளையும் முதல்வர் ஏற்றுக் கொண்டார். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளேன். குழந்தைகளின் கல்விச் செலவுகள், திவாரியின் தாயாருக்கான செலவு, எனக்கு வேலை என அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக முதல்வர் கூறியுள்ளார் என்றார்.

இதுதொடர்பாக துணை முதல்வர் தினேஷ் சர்மா கூறுகையில்,  அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் திவாரியின் குடும்பத்தினர் திருப்தி அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து தருவோம். அவரது மனைவியின் கல்வி தகுதிக்கு ஏற்ப வேலை வழங்கப்படும். இழப்பீட்டுத் தொகையாக ரூ. 25 லட்சம் வழங்கப்பட உள்ளது. அவரது இரு பெண் குழந்தைகள் மற்றும் அவரது தாயாரின் பெயரிலும் தலா ரூ. 5 லட்சம் வங்கியில் நிலையான வைப்பு கணக்கில் போடப்படும். திவாரியின் குடும்பத்தினர் இதற்கு முன்னதாக பாஜகவில் இருந்துள்ளனர். இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய அவர்கள் விரும்பவில்லை. குற்றவாளிகளான பிரசாந்த் செளதரி மற்றும் சந்தீப் குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பணியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.

இதனிடையே, மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை காப்பாற்ற யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தோற்றுவிட்டது என்று மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் சுகல்தேவ் பாரதிய சமாஜ கட்சியின் தலைவரும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், என்கவுன்ட்டர் என்ற பெயரில் ஒரு அப்பாவி கொல்லப்பட்டிருக்கிறார். 

காவல்துறையினர் இந்த சம்பவத்தை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். குற்றவாளிகள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் மாநிலத்தில் குற்றங்களை குறைக்கவும் இயலவில்லை. மக்களை பாதுகாப்பாக எண்ண வைக்கவும் முடியவில்லை. சட்டம், ஒழுங்கை காப்பதில் அவரது அரசு முற்றிலும் தோற்றுவிட்டது என்று கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com