பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2.50 குறைக்க மத்திய அரசு முடிவு
புது தில்லி: மத்திய அரசு தற்போது எடுத்து வரும் முயற்சிகளின் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சரக்கு வாகனங்களுக்கான வாடகை அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடுமையான துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசு தற்போது எடுத்து வரும் முயற்சிகளின் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தில்லியில் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி புதனன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய அரசானது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தனது கலால் வரியில் இருந்து ரூ. 1.50 குறைத்துக் கொள்வது என்று முடிவு செய்துள்ளது.
அதேபோல் எண்ணெய் நிறுவனங்களும் தங்களது லாபத்திலிருந்து ரூ. 1 குறைத்துக் கொள்வதென்று முடிவு செய்துள்ளன.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது லிட்டருக்கு ரூ. 2.50 குறையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியின் தலையீட்டின் பெயரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.