லக்னௌ: உத்தரபிரதேச மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரீடா பகுகுண ஜோஷிக்கு எதிராக அலஹாபாத் சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்துள்ளது.
உத்தரபிரதேச மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் ரீடா பகுகுண ஜோஷி. முன்பு காங்கிரஸில் இருந்த இவர் பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவர் கடந்த 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த போது, தடையை மீறி லக்னௌவில் பொதுக் கூட்டம் நடத்தியதுடன், பின்னர் சட்டசபையை நோக்கி பேரணியும் நடத்தினார். இதன் காரணமாக காவல்துறையினருடன் தகராறு ஏற்பட்டது.
அப்போது தொடரப்பட்ட வழக்கில்தான் அவருக்கு அலஹாபாத் சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்துள்ளது. வரும் 31-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதிகள் அவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
நாடெங்கும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குக்களை விசாரிக்க என்று தனியாக மத்திய அரசு 11 மாநிலங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்களை உருவாகியுள்ளது. அவற்றில் அலஹாபாத் சிறப்பு நீதிமன்றமம் ஒன்று.
ரீடா பகுகுண ஜோஷிக்கு எதிரான கிரிமினல் வழக்கு தொடர்ந்து அங்கு நடைபெற்று வந்த நிலையில், பலமுறை ஆஜராக சம்மன்கள் அனுப்பப்பட்டு வந்த நிலையில், அவர் ஆஜராகாத காரணத்தினால், தற்போது அவருக்கு வாரண்ட் பிறப்பித்துள்ளது.