மாரத்தான் போட்டியில் ஓடி கால் தடுக்கி தவறி விழுந்த அமைச்சர்
பெங்களூரு: தசரா பண்டிகையை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஒடிய கர்நாடக மாநில அமைச்சர், கால் தடுக்கி தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கடந்த 9ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. பத்து நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த விழாவினை ஒட்டி தினமும் பல்வேறு விதமான போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக ஞாயிறு காலை மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த மாநில அமைச்சர் ஜி.டி. தேவகவுடா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது போட்டியில் பங்கேற்றவர்களுடன் சேர்ந்து அவரும் சிறிது தூரம் ஓடினார். ஆனால், சில நிமிடங்களிலேயே, கட்டியிருந்த வேட்டியை கையில் பிடித்தபடியே ஓடிக் கொண்டிருந்த அவர் நிலை தடுமாறிக் கீழே விழுந்தார். உடனே ஏற்பாட்டாளர்கள் விரைந்து வந்து அவரைக் கை கொடுத்து எழுப்பினார்கள். இதனாலங்கே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.