மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

சபரிமலை கோயில் நடை மூடப்பட்டது

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 5 நாள் பூஜைக்குப் பிறகு திங்கள்கிழமை மூடப்பட்டது

News image

கோயிலுக்கு பெண்கள் சிலர் ஆண்கள் உடையணிந்து வருவதாக வதந்தி கிளம்பியதை அடுத்து, திங்கள்கிழமை சந்நிதானத்தை சுற்றி மனிதச் சங்கிலியால் தடுப்பு அமைத்த பக்தர்கள்.

Updated On :22 அக்டோபர் 2018, 9:13 pm


சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 5 நாள் பூஜைக்குப் பிறகு திங்கள்கிழமை மூடப்பட்டது. அதேபோல், கோயிலுக்குச் செல்ல முயன்ற மேலும் ஒரு பெண், ஐயப்ப பக்தர்களால் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டார். 
சபரிமலை கோயிலுக்குச் செல்வதற்காக, பிந்து என்ற தலித் சமூக ஆர்வலர், போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்தில் பம்பைக்கு திங்கள்கிழமை காலை புறப்பட்டுச் சென்றார். 
பம்பை அருகே சென்று கொண்டிருந்தபோது, அவர் வருவதை அறிந்த பாஜக தொண்டர்கள், பேருந்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு பேருந்தில் இருந்து இறங்கி அவர் திரும்பிச் சென்றார். அவரை போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதித்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முயற்சி செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளும், ஐயப்ப பக்தர்களும், பல்வேறு ஹிந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்தச் சூழலில், ஐயப்பன் கோயிலின் நடை கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டது. தீர்ப்பை ஆதரித்து, கோயிலுக்கு வந்த பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் என சில பெண்களை பக்தர்கள் பாதி வழியில் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, சபரிமலை கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் கோயிலுக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக, கோயில் பகுதியில் பக்தர்கள் முகாமிட்டிருந்தனர்.
5 நாள் பூஜைக்குப் பிறகு கோயிலின் நடை திங்கள்கிழமை இரவு மூடப்பட்டது. அதன் பிறகு, மகர விளக்கு பூஜைக்காக கோயில் மீண்டும் அடுத்த மாதம் திறக்கப்படும். இதனிடையே, கடைசி நாளான திங்கள்கிழமை, ஏராளமான பெண்கள் கோயிலுக்குச் செல்வதற்கு திட்டமிட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.