புது தில்லி: சிறந்த பொருளாதாரக் கொள்கைகளால் உலகின் அமைதிக்காக பணியாற்றியதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தென் கொரியாவின் மிக உயரிய சியோல் அமைதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென்கொரியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான சியோல் அமைதி விருதைப் பெறும் 14வது முக்கியப் பிரமுகராக பிரதமர் மோடி திகழ்கிறார்.
சர்வதேச ஒற்றுமை ஓங்கச் செய்யவும், சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபட்டதற்காகவும், லஞ்சத்தை ஒழித்து, சமூக முன்னேற்றத்தின் மூலம் இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அதன் மூலம் இந்திய பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தியதற்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு 2018ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருதினை வழங்க சியோல் அமைதி விருதுக் குழு முடிவு செய்துள்ளது.
பணக்காரர்கள் - ஏழைகள் இடையேயான வேறுபாட்டை மோடிநாமிக்ஸ் மூலம் அகற்றி, உலக அமைதி மற்றும் மனித மேம்பாட்டிற்காக ஆற்றிய பணியை அங்கீகரித்து, பாராட்டும் வகையில் பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.
தென்கொரியாவின் மிக உயரிய விருதினைப் பெறும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.