பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறியது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்றைய (திங்கள்கிழமை) நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.91 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76.98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த தொடர் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளும் உடன் இணைந்து இன்று முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அது மீது விதிக்கப்பட்டுள்ள வரி தான் காரணம் என காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். மேலும், அதனை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கையையும் காங்கிரஸ் முன்வைக்கிறது.
ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறியது. இந்நிலையில், பாஜக இப்படி கூறியது தான் இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை. பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள கொடுமையான வரிகள் தான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதைச் சிறு பிள்ளைகள் கூட அறிவார்கள்.
பெட்ரோல், டீசல் பொருட்களை ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் கொண்டு வருவதற்கு ஏன் மத்திய அரசு முரட்டுத்தனமாக மறுக்கிறது? கச்சா எண்ணெய் விலை $107 ஆக இருந்த போது விலை குறைவு. இப்பொழுது கச்சா எண்ணெய் விலை $ 78 ஆக இருக்கும் போது விலை உயர்வு! ஏன்? ஏன்?" என்றார்.