லக்னௌ: மத்திய இணை அமைச்சர் மேனகா காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்புரில் இன்று தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். முதல் நாளே அவரது பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உங்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் என்றால்.. முஸ்லிம் மக்களே நீங்கள் எனக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று மேனகா காந்தி கூறியுள்ளார்.
துரப் கனி கிராமத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றுப் பேசிய மேனகா காந்தி, எனக்கு வாக்களிக்கவில்லை என்றால் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க மாட்டேன் என்றும் அவர் நேரடியாகவே முஸ்லிம் வாக்காளர்களை மிரட்டும் தொணியில் பேசியுள்ளார்.
வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்கும் முஸ்லிம் மக்களிடம் நான் சொல்வது இதுதான். ஒரு பக்கம் கொடுத்து, மறுபக்கம் எடுத்துக் கொள்ளும் ஒப்பந்தம். இதில் வேலைதான் டீல் என்கிறார் மேனகா காந்தி.
நான் உங்கள் ஆதரவு இல்லாமலேயே தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று வந்து, உங்களுக்காக பணி செய்து கொண்டே இருக்க முடியாது. நான் தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் உங்களுக்குத்தான் நான் தேவைப்படுகிறேன். இது உங்களுக்கான வாய்ப்பு, எனக்கு ஆதரவு அளியுங்கள் என்றும் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.