பாகிஸ்தானைத் தொடர்ந்து இந்தியாவும் சம்ஜௌதா விரைவு ரயில் சேவையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்தது.
இந்திய ரயில்வே ஞாயிறுதோறும் தில்லியில் இருந்து அட்டாரிக்கு சம்ஜௌதா விரைவு ரயிலை இயக்கும். அதன்பிறகு, அட்டாரியில் இருந்து லாகூருக்கு பாகிஸ்தான் ரயிலை இயக்கும். அட்டாரி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மாற வேண்டும்.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கும் சிறப்புப் பிரிவை இந்தியா ரத்து செய்ததையடுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சம்ஜௌதா விரைவு ரயில் சேவையை பாகிஸ்தான் கடந்த 8-ஆம் தேதி ரத்து செய்தது. அதைத்தொடர்ந்து, தில்லி - லாகூர் இடையிலான பேருந்து சேவையையும் அந்நாடு நிறுத்திக் கொண்டது.
இந்த வரிசையில், தற்போது பாகிஸ்தானைத் தொடர்ந்து இந்தியாவும் சம்ஜௌதா இணைப்பு விரைவு ரயில் சேவையை ரத்து செய்துள்ளது. இந்த அறிவிப்பை வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தீபக் குமார் வெளியிட்டார்.