/

ராஜீவ் காந்தி அதிகாரத்தைப் பயன்படுத்தி பயத்தை உண்டாக்கவில்லை: சோனியா

1984-இல் பெரும்பான்மையான இடங்கள் கிடைத்தபோதிலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தலையோ, பயத்தையோ உண்டாக்கவில்லை என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:53 am

DIN


1984-இல் பெரும்பான்மையான இடங்கள் கிடைத்தபோதிலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தலையோ, பயத்தையோ உண்டாக்கவில்லை என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு தில்லியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்தது. இதில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பங்கேற்று உரையாற்றினார். அவர் அப்போது பேசுகையில், 

"1984-இல் ராஜீவ் காந்தி முன்னெப்போதும் இல்லாத வகையில் அமோக வெற்றி பெற்றார். ஆனால், அவர் தனக்கான அதிகாரத்தைக் கொண்டு பயத்தையோ அல்லது அச்சுறுத்தலா சூழலையோ உண்டாக்கவில்லை. அவர், தனது அதிகாரத்தின் மூலம் அமைப்புகளின் சுதந்திரத்தை அழிக்கவில்லை, மாற்றுக் கருத்துகளை நசுக்கவில்லை மற்றும் ஜனநாயக மரபுகளுக்கு அபாயகரமான சூழலை ஏற்படுத்தவில்லை.

1989-இல் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மையான இடங்கள் கிடைக்கவில்லை. அதனால், மக்களின் தீர்ப்பை அவர் தாழ்மையாக ஏற்றுக்கொண்டார். தற்போதைய தலைமுறையினருக்கு நான் இதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் மிகப் பெரிய கட்சியாக இருந்தபோதிலும், அவர் ஆட்சி அமைக்க நினைக்கவில்லை. அவருடைய நேர்மை அதைச் செய்வதற்கு அவரை அனுமதிக்கவில்லை. 

தேர்தலில் ஏற்றங்களும், இறக்கங்களும் தவிர்க்க முடியாதது. ஆனால் பிரிவினைவாதப் படைகள், நமது சமுதாயத்தின் இயல்பான தன்மையை மாற்ற முயற்சிப்பவர்கள் மற்றும் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிந்தனைகளை மாற்ற முயற்சிக்கும் படைகள் ஆகியவற்றுக்கு எதிராக நமது சித்தாந்தப் போராடத்தை தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும்" என்றார். 

மத்திய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் சுவர் ஏறிக் குதித்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சோனியா காந்தியின் இந்த கருத்து முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், அவர் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ஆற்றும் முதல் உரை இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.