/

இன்று மாலை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்? 

கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தை இன்று மாலை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:53 am

DIN

கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தை இன்று மாலை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரி, முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலையிலிருந்து, அவரை கைது செய்வதற்கான முயற்சிகளில் சிபிஐ-யும், அமலாக்கத் துறையும் ஈடுபட்டிருந்தன. எனினும், ப.சிதம்பரம் எங்கிருக்கிறார்? என்ற கேள்வி நிலவி வந்த சூழலில், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை இரவில் அவர் செய்தியாளர்களை திடீரென சந்தித்தார். 

பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, தில்லியின் ஜோர்பாக் பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு வந்தார். இதைத்தொடர்ந்து, அவரது வீட்டுக்கு வந்த சிபிஐ அதிகாரிகள், வீட்டின் வெளிக்கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததை அடுத்து, 5 அடி உயரமுள்ள மதில் சுவரில் ஏறி குதித்து, 3 அதிகாரிகள் உள்ளே சென்றனர். அவர்கள் கதவை திறந்ததைத் தொடர்ந்து, மற்ற அதிகாரிகளும் உள்ளே சென்றனர். வீட்டின் பின்புற வாயிலில் ஒரு குழு கண்காணிப்பில் ஈடுபட்டது. இதனிடையே, ப.சிதம்பரம் வீட்டுக்கு அருகே திரண்ட காங்கிரஸார், மத்திய அரசையும் சிபிஐயையும் எதிர்த்து கோஷமிட்டனர்.

அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த பரபரப்பான சூழலில், ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், அவரை ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். முன்னதாக, ப.சிதம்பரம் வெளிநாடு தப்பி விடாமல் இருப்பதற்காக, அவரை தேடப்படும் நபராக அறிவித்து, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக நோட்டீஸ் வெளியிட்டிருந்தன.

இதனிடையே ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் அதிகாலையில் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ப.சிதம்பரத்தை இன்று மாலை 4 மணிக்கு தில்லி ரோஸ் அவென்யூ வளாகத்திலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.