மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 25 அடி வெண்கல சிலை உத்தரப் பிரதேசத்தில், அவரது பிறந்தநாளான டிசம்பர் 25ம் தேதி திறக்கப்படுகிறது.
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் திருவுருவச்சிலை உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிறுவப்பட உள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகமான லோக் பவன் நுழைவாயிலில் நிறுவப்படும் இந்த சிலை, அவரது பிறந்தநாளான வருகிற டிசம்பர் 25ம் தேதி திறக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, வாஜ்பாயின் சிலையை திறந்து வைக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், பிரதமர் அலுவலகத் தரப்பில் இருந்து இன்னும் பதில் தெரிவிக்கவில்லை.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உ.பி. தலைநகர் லக்னோ தொகுதியில் இருந்து தொடர்ந்து 5 முறை மக்களைவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், மூன்று முறை நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளார்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பி ராஜ் குமார் பண்டிட் என்பவரால் ரூ.89.6 லட்ச மதிப்பில் இந்த சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை நிறுவப்படுவதன் மூலமாக மாநிலத்தின் மிக உயரமான சிலையாக இது இருக்கும்.
கடந்த ஆண்டு, மகாராஷ்டிராவின் உத்தம் பச்சர்னே தயாரித்த சுவாமி விவேகானந்தரின் 12.5 அடி வெண்கல சிலை ராஜ் பவனில் அப்போதைய ஆளுநர் ராம் நாயக் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரால் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.