பீம் ஆர்மி தலைவரின் ஜாமீன் மனு நிராகரிப்பு: 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு!

தில்லி ஜாமா மசூதி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 'பீம் ஆர்மி' அமைப்பின் தலைவர் சந்திரசேகர ஆசாத்தை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு தில்லி தீஸ் ஹசாரி உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


தில்லி ஜாமா மசூதி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 'பீம் ஆர்மி' அமைப்பின் தலைவர் சந்திரசேகர ஆசாத்தை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு தில்லி தீஸ் ஹசாரி உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர ஆசாத் நேற்று (வெள்ளிக்கிழமை) தில்லி ஜாமா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், இதற்குப் போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, இந்தப் பேரணி தடையை மீறி நடைபெற்றது. இதனால், போலீஸார் பேரணியைத் தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக இது வன்முறையில் நிறைவடைந்தது.

இதைத் தொடர்ந்து, சந்திரசேகர ஆசாத்தை தில்லி போலீஸார் கைது செய்தனர். 

இதையடுத்து, சந்திரசேகர ஆசாத் தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி முறையிட்டார். அதேசமயம், அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு போலீஸ் தரப்பில் கோரப்பட்டது.

இந்நிலையில், சந்திரசேகர ஆசாத்தின் ஜாமீன் மனுவை நிராகரித்த தீஸ் ஹசாரி நீதிமன்றம், அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

முன்னதாக, போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு முன் பேசிய சந்திரசேகர் ஆசாத், 

"இந்தச் சட்டம் திரும்பப் பெறுவதற்கு நாம் ஒரு சில தியாகங்களைச் செய்ய வேண்டும். நாங்கள் வன்முறையை ஆதரிக்கவில்லை. வெள்ளிக்கிழமை காலை முதல் நாங்கள் மசூதியின் உள்ளே அமர்ந்திருக்கிறோம். எங்கள் மக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. போலீஸார் வெகுஜன மக்கள்போல் உடை அணிந்து போராட்டத்தைத் தடுக்க வன்முறையைத் தூண்டுகின்றனர்" என்றார்.

இத்தனை பாதுகாப்புகளையும் மீறி எப்படி உள்ளே சென்றீர்கள் என்று எழுப்பிய கேள்விக்குப் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பதிலளித்த அவர், "என் பெயர் சந்திரசேகர ஆசாத். போலீஸாரால் என்னை சிறைபிடிக்க முடியாது. தொப்பியை அணிந்து, சால்வையுடன் மசூதிக்குள் எளிதாக நுழைந்தேன்" என்றார்.

இதையடுத்து, தனது ஆதரவாளர்களிடம் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தும்படி கேட்டுக்கொண்ட அவர்,

"வன்முறையில் ஈடுபவர்கள் நம் மக்கள் கிடையாது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாமா மசூதியில் நமது அமைதிப் போராட்டம் தொடரும். அம்பேத்கரைப் பின்பற்றுபவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com