ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ஹேமந்த் சோரன், பெற்றோரிடம் ஆசி பெறுவதற்காக அவர்களது இல்லத்துக்கு சைக்கிள் ஓட்டி பயணித்துள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (திங்கள்கிழமை) காலை முதல் நடைபெற்று வருகிறது. இங்கு ஆட்சி அமைப்பதற்கு மொத்தம் 42 இடங்கள் தேவை. இந்நிலையில், ஜெஎம்எம் - காங்கிரஸ் - ராஷ்டிர ஜனதா தளம் (ஆர்ஜேடேி) கூட்டணி 46 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதில், ஜெஎம்எம் 29 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், ஆர்ஜேடி 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. பாஜக 24 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. எனவே, 29 இடங்களில் முன்னிலை வகித்து வரும் ஜெஎம்எம் அம்மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மொத்தம் பதிவான வாக்குகளில் ஜெஎம்எம் 19.2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஜெஎம்எம் கட்சியின் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான ஹேமந்த் சோரன் தும்கா மற்றும் பார்ஹைத் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் பார்ஹைத் தொகுதியில் 12,000 வாக்குகள் வித்தியாசத்திலும், தும்காவில் 700 வாக்குகள் வித்தியாசத்திலும் அவர் முன்னிலை வகித்து வருகிறார்.
தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக் கணிப்பில் தொங்கு சட்டப்பேரவையே அமையும் என்று பெரும்பாலும் கூறப்பட்டது. ஆனால், சோரன் வாக்காளர்களை ஜெஎம்எம் பக்கம் ஈர்த்துள்ளார். குறிப்பாக பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் இவர் நிறைய வாக்குகளைப் பெற்றுள்ளார்.
எனவே, ஜெஎம்எம் - காங்கிரஸ் - ராஷ்டிர ஜனதா தளம் (ஆர்ஜேடேி) கூட்டணி சார்பில் மாநிலத்தின் அடுத்த முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. இதன்மூலம், தனது அரசியல் வாழ்க்கையில் அவர் 2வது முறையாக மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்பார்.
இந்நிலையில் பெற்றோரிடம் ஆசி பெறுவதற்காக, தனது தந்தையும் ஜெஎம்எம் தலைவருமான ஷிபு சோரன் இல்லத்துக்கு ஹேமந்த் சோரன் சைக்கிள் ஓட்டி பயணித்துள்ளார்.