உ.பி.யில் போராட்டத்திற்கு காரணமான 60 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு காரணமாக  இருந்ததாகக் கோரி உத்தரப் பிரதேசத்தில் சுமார் 60 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்
உ.பி.யில் போராட்டத்திற்கு காரணமான 60 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு காரணமாக  இருந்ததாகக் கூறி உத்தரப் பிரதேசத்தில் சுமார் 60 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. உத்தரப்பிரதேசத்திலும் கடந்த சில தினங்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அது வன்முறையாகவும் வெடித்துள்ளது. இதில் பொதுச்சொத்துக்கள் பல சேதமாகியுள்ளன. போராட்டத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் 10 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. சுமார் 30 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். அதில் 12 பேர் காவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, போராட்டம் நடக்க க் காரணமாக இருந்ததாகக் கூறி முசாபர்நகரில் உள்ள 60 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி அபிஷேக் யாதவ், 'ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள கடைகளை மூடும்படி நாங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், எச்சரிக்கையை மீறி, அவர்கள் கடையை திறந்தனர். கடைகளுக்கு முன்பாக தான் போராட்டக்காரர்கள் கூடினார்கள். எனவே, போராட்டம் நடத்த காரணமாக இருந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது' என்று விளக்கம் தெரிவித்தார். 

முன்னதாக, முதல்வர் யோகி ஆதித்யநாத், 'குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்கள்/ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையினால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும்' என்று எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com