கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளிலும் நாடாளுமன்றத்தில் அமளி

நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான புதன்கிழமையும், மாநிலங்களவை, மக்களவை ஆகிய இரண்டிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

Updated On :14 பிப்ரவரி 2019, 1:20 am IST


நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான புதன்கிழமையும், மாநிலங்களவை, மக்களவை ஆகிய இரண்டிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
மக்களவைக்கு தலையில் பேன்டேஜ் கட்டுடன் வந்திருந்த சமாஜவாதி கட்சி உறுப்பினர் தர்மேந்திர யாதவ், உத்தரப் பிரதேசம், அலகாபாத் ஆகிய இடங்களில் சமாஜவாதி கட்சித் தொண்டர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதாகக் கூறினார். இதில்  நாடாளுன்ற உறுப்பினர்களும் தாக்கப்பட்டதாகவும், கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார் என்றும் குரல் எழுப்பினார். அப்போது, இந்த விவகாரத்தை பின்னர் எழுப்புமாறு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, சமாஜவாதி கட்சி உறுப்பினர்களும், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்களும் பல்வேறு விவகாரங்களை எழுப்பி அவையின் மையப் பகுதியில் அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடிய போது, திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். இதேபோன்று, தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களும் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி அவையின் மையப்பகுதியில் நின்றனர்.
அமளிக்கு இடையே, முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்கள் தடை திருத்த மசோதா, ஜாலியன் வாலாபாக் தேசிய சட்டத் திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து மாலை 5.30 மணி வரை அவை அலுவல் நடைபெற்றது. இறுதியில் பிரதமர் மோடி, சுமித்ரா மகாஜன் ஆகியோர் உரையுடன் மக்களவை, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 
மாநிலங்களவையில்..: மாநிலங்களவையிலும் சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவையின் மையப் பகுதியில் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியதும், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், நிதி ஒதுக்கீடு மசோதா, நிதி மசோதா ஆகியவை விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது. இதனிடையே, ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்புடைய மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், அவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு விவகாரங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக மாநிலங்களவையில் அமளி காரணமாக முக்கிய விவாதங்கள் ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.