மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர், கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசு கவிழும் என்று பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
ஹாவேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக வெற்றி உறுதியேற்பு மாநாட்டைத் தொடக்கிவைப்பதற்கு முன்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கர்நாடகத்தை ஆளும் மஜத- காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் தீவிரமாக இருந்துவருகிறது. இந்தக் கட்சிகளின் தலைவர்கள் கருத்துவேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றனர்.
மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர், இரு கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வாய்ப்பில்லை. அப்போது கூட்டணி அரசு கவிழ்வது உறுதி. மக்களவைத் தேர்தலுக்காக அனைத்து வகையான முன்னேற்பாடுகளையும் பாஜக செய்துள்ளது.
ஹாவேரிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்பட யார் வந்து பிரசாரம் செய்தாலும், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவார்.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக, கலபுர்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார். மக்களவைத் தேர்தலுக்கு அரசியல் சூழ்நிலை எந்த மாதிரி மாறப் போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வேலையில் காங்கிரஸ் தொடர்ந்து ஈடுபட்டுவந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை காங்கிரஸார் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால்தான் முதல்வர் பதவியை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜி.பரமேஸ்வருக்கு வழங்காமல் அந்தக் கட்சியினர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். அந்த வருத்தத்தையே பரமேஸ்வர் வெளிப்படுத்தி இருக்கிறார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










