

கூடலூரை அடுத்துள்ள பந்திப்பூர் புலிகள் காப்பக வனத்தில் திடீரென ஏற்பட்ட பலத்த காட்டுத் தீயால் 2,500 ஏக்கர் வனப்பகுதி சாம்பலாக உருகுலைந்துபோனது.
சனிக்கிழமை நேரிட்ட இந்த காட்டுத் தீயால் தமிழக-கர்நாடக எல்லை மூடப்பட்டது. இந்த காட்டுத் தீ மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றே தெரிய வந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பக எல்லையை அடுத்துள்ள கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பக வனத்தில் ஏற்பட்ட திடீர் காட்டுத் தீயால் பல நூறு ஏக்கர் காடுகள் எரிந்து சாம்பலாகின.
தீயை அணைக்க கர்நாடக வனத் துறையினர் எவ்வளவோ போராடியும் முடியவில்லை. முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர்களை அனுப்பி தீயைக் கட்டுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
காட்டுத் தீயின் காரணமாக இரு மாநில எல்லைப் பகுதி புகை மண்டலமாக மாறியது. கூடலூர்-பெங்களூரூ சாலையோரம் காட்டுத் தீ பரவியதால் கர்நாடக வனத் துறையினர் உடனே கக்கநல்லாவிலுள்ள இரு மாநில எல்லையை மூடி போக்குவரத்தை தடை செய்தனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.
பல ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகிப் போனது.
இதற்கிடையே, தீயில் கருவிய விலங்குகளின் புகைப்படங்கள் என்று சமூக வலைத்தளங்களில் 4 புகைப்படங்கள் பரவி வருகிறது. தீயில் கருகிய முயல், பாம்பு, குரங்கின் புகைப்படங்கள் பழைய புகைப்படங்கள் என்றும், அதனை பந்திப்பூர் காட்டுத் தீயில் உயிரிழந்த விலங்குகளின் புகைப்படங்கள் என்று யாரும் வெளியிட வேண்டாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.