
சபரிமலை கோயிலில் எதற்காக புதன்கிழமை பரிகார பூஜை நடத்தப்பட்டது என்று தந்திரி கண்டரரூ ராஜீவரூ 15 நாட்களுக்குள் விளக்கமளிக்கவேண்டும் என்று திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் புதன்கிழமை அதிகாலை சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து, சபரிமலை தந்திரி கண்டரரூ ராஜீவரூ, கோயிலின் நடையை அடைத்து பரிகார பூஜைகள் மேற்கொண்டார். இந்த சம்பவம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சபரிமலையில் பரிகார பூஜை நடத்தியதற்கான விளக்கத்தை தந்திரி கண்டரரூ ராஜீவரூ-விடம் திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் கேட்டுள்ளது. திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் இன்றைய (வெள்ளிகிழமை) கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வாரியத் தலைவர் பத்மகுமார் கூறுகையில்,
"பரிகார பூஜை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு எதிரானது. அதனால், தந்திரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவருக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவருடைய விளக்கம் கேட்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.
முன்னதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"சபரிமலையில் புதன்கிழமை காலை சன்னதிக்குள் பெண்கள் நுழைந்தவுடன் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோயிலின் நடையை அடைத்து பாரம்பரிய நடைமுறையை மீறி பரிகார பூஜை செய்துள்ளார் தந்திரி. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறுவதாகும். இந்த வழக்கில் அவரும் ஒரு வாதி என்பதால், அவரது கருத்தையும் கேட்டே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கபப்ட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பை தந்திரி ஏற்காவிட்டால் அவர் பதவி விலகியிருக்க வேண்டும்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.