புது தில்லி: காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்யும் ராகுல்காந்தியின் முடிவுக்கு எதிராக, காங்கிரஸ் தலைமையகத்தில் தூக்கிட்டுக் கொள்ள முயன்ற தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்த தோல்வியின் எதிரொலியாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய உள்ளதாக ராகுல் காந்தி அறிவித்தார். கட்சியின் மூத்த தலைவர்கள் அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்திய போ தும், அவர் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்யும் ராகுல்காந்தியின் முடிவுக்கு எதிராக, காங்கிரஸ் தலைமையகத்தில் தூக்கிட்டுக் கொள்ள முயன்ற தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
ராகுல்காந்தி தனது முடிவைக் கைவிட வலியுறுத்தி தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் தொண்டர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்திவருகிறார்கள்.
அதன்படி செவ்வாயன்று இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள ஹமீத் கான் என்ற தொண்டர் தலைமையகத்திற்கு வந்துள்ளார். முதலில் உள்ளே இருந்தவர் திடீரென வெளியே வந்து அங்குள்ள மரம் ஒன்றின் கிளையில் ஏறி, தூக்கிட்டுக் கொள்ள முயன்றுள்ளார்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த தில்லி போலீசார் அவரைக் கவனித்து விரைந்து செயல்பட்டு அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கியுள்ளனர். பின்பு அவர் விசாரணைக்காக துக்ளக் நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதன்காரணமாக அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.