ஏழை மனிதரை அதிர்ச்சியடைய வைத்த மின் கட்டணம்!  ரூ.128 கோடி செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு!

மின்சாரம் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அதே சமயத்தில் மின்கட்டணம் சிலரை அதிர்ச்சியில் உறைய வைத்துவிடுகிறது. 
ஏழை மனிதரை அதிர்ச்சியடைய வைத்த மின் கட்டணம்!  ரூ.128 கோடி செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு!
Updated on
2 min read

மின்சாரம் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அதே சமயத்தில் மின்கட்டணம் சிலரை அதிர்ச்சியில் உறைய வைத்துவிடுகிறது. பயன்படுத்திய மின்சாரத்துக்கு கட்டணம் செலுத்துவது ஒவ்வொருவரின் கடமை. ஆனால் அதற்கு நேர்மாறாக நடந்துவிட்டால் யாரிடம் சென்று முறையிடுவது? உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷமிம் தன் மனைவியுடன் சாம்ரி என்ற கிராமத்தில் வசிக்கிறார். அவர் அடைந்த அதிர்ச்சி இதுவரை அவர் வாழ்நாளில் அறிந்திராதது. காரணம் அவருக்கு வந்து சேர்ந்த முந்தைய மாதத்து மின்கட்டணத்தைப் பார்த்து ஒரு நொடி செயலற்றுப் போயிருக்கிறார்.

ஷமீம் பயன்படுத்தியிருந்த 2 கிலோவாட் மின் இணைப்புக்கு அவருக்கு கட்டணமாக வந்த தொகை ரூ.128 கோடி. அந்தத் தொகையை அவர் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஏதோ பிழை உள்ளது அல்லது தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம் என்று நினைத்த ஷமிம் மின்வாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இது குறித்து பேசியுள்ளார். ஆனால், அங்கிருந்த அதிகாரிகள் கூறிய விஷயம் ஷமிமை அதிர்ச்சியின் எல்லைக்கு இட்டுச் சென்றது. மின்வாரிய அதிகாரிகள் ஷமிம் அந்தத் தொகையை நிச்சயம் செலுத்தியாக வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், அக்கட்டணத்தை செலுத்தாததால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஷமிம், 'எனது முறையீடை காது கொடுத்து கேட்க யாரும் இல்லை. இத்தகைய மிகப் பெரிய தொகையை எளியவனான என்னால் எப்படி செலுத்த முடியும்? நான் இது தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற போது, மின்கட்டணத்தைச் செலுத்தினால்தான் மின்சாரம் வழங்குவோம் எனக் கூறி, மின் இணைப்பை வேறு துண்டித்து விட்டனர்’ என்றார் மன வருத்தத்துடன்.

மேலும் அவர் கூறுகையில், 'ஹப்பூர் நகரத்துக்கான மொத்த மின் கட்டணத்தையும் நான்தான் கட்ட வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். என் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்தாலும் என்னால் இந்தத் தொகையை செலுத்த முடியாது’ என்றார். 

இது தொடர்பாக துணை மின் பொறியாளர் ராம் சரண் கூறுகையில், 'இது தொழில்நுட்பப் பிழையாக இருக்க வேண்டும். முதலில் கூறப்பட்ட தொகையை கட்டிவிட்டு அதன் பின் அவர்கள் அந்த மின் கட்டண ரசீதைக் கொடுத்தால்தான் இதனை சரி செய்ய முடியும், அப்போது கணினியில் உள்ள தொழில்நுட்பப் பிழைகளைச் சரி செய்து, மீதிப் பணத்தை ஒப்படைத்து, புதிய ரசீதை வழங்குவோம். இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. தொழில்நுட்பத் தவறுகள் நடப்பது இயல்புதான்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com