ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி உடனிடயாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்தார். இதுதொடர்பாக தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் பேசியதாவது:
ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அந்த ஆவணங்கள் உண்மைதன்மை கொண்டதாக அமைந்திருக்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது பிரதமர் மோடி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். அதேவேளையில் தன் மீது தவறில்லை என்றால் பிரதமரும் அந்த விசாரணையில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த ரஃபேல் ஒப்பந்தத்தில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழலில் ஈடுபட்டவர் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்? இந்த வழக்கில் பிரதமர் மோடி தவறு செய்தது நிரூபிக்கும் வகையிலான உண்மை ஆதாரங்கள் உள்ளன. எனவே அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்.
ஏனென்றால் இந்த மொத்த ஊழலில் தொடக்கமும், முடிவும் பிரதமர் மோடி தான். வேண்டுமென்றே திட்டமிட்டு அந்த ஆவணங்களை அழிக்கவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. ஊழல் மோடி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.