மும்பை: இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய வழக்கில் பிரபல தொலைக்காட்சி நடிகர் கரண் ஓபராய்க்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகர் கரண் ஓபராய். இவர் தன்னுடைய தொலைக்காட்சி பயணத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் இயக்கிய ‘ஸ்வாமிமான்' என்ற தொலைக்காட்சித் தொடரிலிருந்து தொடங்கினார். அத்துடன் ஃபேஷன் மாடலாகவும், இசைக்குழு ஒன்றில் பாடகராகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில் இளம்பெண் ஒருவர் கரண் ஓபராய் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் காவல்துறையிடம் புகார் கூறினார். அத்துடன் அதை படம் பிடித்து வைத்துக் கொண்டு, பணம் கொடுத்தால் மட்டுமே விடியோவை கொடுப்பதாக கரண் மிரட்டியுள்ளார் என்றும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஓஷியார் பகுதி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்து, கரண் ஓபராயை மே 6-ஆம் தேதி கைது செய்தனர்.
அவர் மீது இந்திய குற்றவியல் பிரிவு 376 (பலாத்காரம்) மற்றும் 384 (பணம் பறிப்பு) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அவர் 9-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய வழக்கில் கரண் ஓபராய்க்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் காவல் முடிந்த நிலையில் அவர் வியாழன் மதியம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அவர் சார்பாக வரும் வெள்ளியன்று அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்று, அவரது வழக்கறிஞர் தினேஷ் திவாரி தெரிவித்தார்.