புது தில்லி: நாதுராம் கோட்ஸே ஒரு தேசபக்தர் என்ற போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் பேச்சுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்காக தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர், ' சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே' என்றார். அவரது இந்த பேச்சு தேசிய அளவில் கடும் சர்ச்சையினை உண்டாக்கியது.
போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குரிடம் வியாழனன்று செய்தியாளர்கள் கமலின் கருத்து குறித்து கேள்வி கேட்டனர் அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
நாதுராம் கோட்ஸே ஒரு தேசபக்தராக இருந்தார். இப்போதும் தேசபக்தராக இருக்கிறார். இனியும் தேசபக்தராகதான் இருப்பார். அவரை தீவிரவாதி என்று கூறுபவர்கள், தங்களைத் தாங்களே விமர்சித்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு தேர்தல் முடிவுகள் தகுந்த பாடத்தினைக் கற்றுத் தரும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாதுராம் கோட்ஸே ஒரு தேசபக்தர் என்ற போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் பேச்சுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வெள்ளியன்று அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
'நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்’ என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியதை மன்னிக்க முடியாது.
தேசப்பிதா காந்தியை அவமதிக்கும் வகையில் சாத்வி பிரக்யா சிங் பேசியது மன்னிக்க முடியாத குற்றம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.