

புது தில்லி: தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கத்தின் கூண்டுக்குள் இளைஞர் ஒருவர் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நடந்துள்ளது. தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இருக்கும் சிங்கத்துக்கு இன்று ஒரு வழக்கமான நாளாக இருக்காது என்று அப்போது யாருக்கும் தெரியாது.
வழக்கம் போல பார்வையாளர்கள் சிங்கத்தை கூண்டுக்கு வெளியே இருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் சிங்கத்தின் கூண்டுக்குள் ஒரு இளைஞர் குதிக்கிறார். அவர் அருகே சிங்கம் வருகிறது. அவர் சிறிதும் அஞ்சாமல் சிங்கத்தை நேருக்கு நேர் அமர்ந்தவாறு பார்க்கிறார். சிங்கமும் அசையாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
சிறிது நேரும் இளைஞரும், சிங்கமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க.. சிங்கமோ, "இவர் எத்தனை கிலோ இருப்பார், எலும்புகள் போக தசைப் பகுதி எவ்வளவு தேறும்" என்று மனதுக்குள் கணக்கெடுத்து முடித்து செயலில் இறங்க தீர்மானித்த போது, உயிரியல் பூங்கா ஊழியர்கள் மிகவும் துரிதமாக செயல்பட்டு, சிங்கத்துக்கு மயக்க ஊசி செலுத்தி, சிங்கத்தை மயக்கமடைய வைத்தனர்.
உடனடியாக கூண்டுக்குள் இறங்கி அந்த இளைஞரை காயமின்றி மீட்டனர். அப்போதுதான் அவர் மது அருந்தி போதையில் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில், அந்த இளைஞர் பிகாரைச் சேர்ந்த ரெஹ்மான் கான் என்பது தெரிய வந்துள்ளது. அவர் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.