

கர்நாடக மாநிலத்தில் வழக்கமாக அனைவரும் கொண்டாடும் தீபாவளியைப் போல அல்லாமல் ஒரே ஒரு குடும்பம் அதிகக் குதூகலத்துடன் இந்த தீபாவளியைக் கொண்டாடியிருக்கிறது.
காரணம், 50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாகக் கூறி புதைக்கப்பட்டர், தற்போது 80 வயது நபராக உயிரோடு திரும்பியிருக்கும் அதிசயம்தான்.
இது ஒரு சுவாரஸ்யமான செத்துப் பிழைத்தக் கதை..
சல்லகேரே தாலுகாவைச் சேர்ந்தவர் சன்னா எரண்ணா. இவர் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகக் கூறி புதைக்கப்பட்டார். அவருக்கு அப்போது 30 வயது இருக்கும். அவ்வளவுதான், அவரைப் பற்றி நினைக்க அவரது குடும்பத்துக்கு பெரிதாக வேறு எதுவும் இல்லை. ஆனால், தற்போது அதே எரண்ணா உயிரோடு இருப்பதாக குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்த போது நம்ப மறுத்துவிட்டார்கள்.
ஆனால் அவர்கள் மறுத்தபோதும் உண்மை பொய்யாகவில்லை. 80 வயதான சன்னா எரண்ணா அவர்களை நம்ப வைக்க உயிரோடு கிராமத்துக்கே வந்து விட்டார். அவருடன் இந்த தீபாவளியை அந்த குடும்பம் குதூகலமாகக் கொண்டாடியும் விட்டனர்.
இவர்களது வாழ்க்கை, சினிமாவில் வரும் கதைகளுக்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு டிவிஸ்டுகள் நிறைந்துள்ளது.
பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு நினைவுத் திறனை இழந்து கிராமத்தை விட்டுச் சென்றுவிட்ட எரண்ணா, தான் யாரென்றே தெரியாமல் ஆந்திராவில் வாழ்ந்து வந்துள்ளார். வேலை தேடி அவரது உறவினர் ஆந்திரா சென்ற போது, அவரைக் கண்டுபிடித்து, அவருக்கு பழைய விஷயங்களைச் சொல்லி நினைவூட்டியிருக்கிறார். தற்போது பழைய விஷயங்களை எல்லாம் எரண்ணாவே நினைவு கூருகிறாராம்.
அவரது மனைவி இருக்கும் சித்ரநாயக்கனஹள்ளி என்ற கிராமத்துக்குக் கொண்டு வந்து நிறுத்திய உறவினர்கள், அவரது குடும்பத்தாருக்கு ஆனந்த அதிர்ச்சியை அளித்துள்ளனர்.
இது பற்றி அவரது உறவினர்கள் கூறுகையில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த எரண்ணா மரணித்துவிட்டதாக நினைத்து அவரை புதைத்துவிட்டோம். அதுவும் நடந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது என்கிறார்கள்.
ஆனால், தான் எப்படி புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து மீண்டெழுந்தேன், எப்படி ஆந்திரா சென்றேன் என்பது பற்றியெல்லாம் எரண்ணாவுக்கு எதுவும் தெரியவில்லை.
நான் எனது உறவுகளைப் பார்க்கும் வரை நான் கர்நாடகாவைச் சேர்ந்தவன் என்றே எனக்குத் தெரியாது. இங்கு வந்து எனது மனைவியைப் பார்த்த பிறகுதான் எனக்கு அனைத்தும் நினைவுக்கு வந்தது என்கிறார் எரண்ணா.
ஆனால், தனது கணவர் உயிரோடு திரும்பி வந்திருப்பதாக உறவினர்கள் கூறுவதை முதலில் ஏற்காத எராஜ்ஜி, தனது முதுகில் இருக்கும் காயம் எப்படி ஏற்பட்டது என்று கேட்ட போது, அதற்கு எரண்ணா, மாடு முட்டியபோது இந்த காயம் ஏற்பட்டதாக சரியான பதிலை அளித்ததால் தான் திரும்பி வந்திருப்பது தனது கணவர் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.
எனக்குக் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவரை புதைக்கும் போது நானும் அங்கே இருந்தேன். இன்று நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் எங்கு மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறாரோ அங்கேயே அவர் வாழலாம் என்று எராஜ்ஜி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.