புது தில்லி: சிபிஐ காவல் முடிந்து தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் சிதம்பரம் இன்று சிறைக்குச் செல்கிறாரா? அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அதற்கு இன்னும் சில நிமிடங்களில் பதிலும் கிடைத்துவிடும்.
இரண்டு நாட்கள் சிபிஐ காவல் நீட்டிப்பு முடிந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சிதம்பரம். அப்போது, ஐஎன்எக்ஸ் வழக்கில் சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் அடைக்க வேண்டும். வெளியில் விட்டால் அவர் ஆதாரங்களை அழித்துவிட வாய்ப்பு உண்டு. எனவே, அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடுங்கள் என்று கோரி சிபிஐ கோரிக்கை மனு தாக்கல் செய்தது.
ஒருவேளை சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட நேரிடும்.
ஆனால் திகார் சிறையில் அடைக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், ஐஎன்எக்ஸ் வழக்கில் அமலாக்கத் துறையிடம் சரணடைய தயார் என்று சிதம்பரம் தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளது.
அதாவது, அமலாக்கத் துறையில் சரணடைய நான் தயாராக இருக்கிறேன். எனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் நான் எதை அழிக்க முடியும். ஆதாரத்தை அழித்துவிடுவேன் என்ற சிபிஐயின் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், தன்னை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டாம் என்று மிகத் தாழ்மையுடனும் சிதம்பரம் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.