
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிதம்பரத்துக்கு ஏற்கெனவே இசட் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், அதற்குரிய பாதுகாப்பு சிறையில் வழங்கப்படும். அதேவேளையில் சிதம்பரத்தின் பாதுகாப்பு கருதி ஒரு கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறைத்துறை தனியாக பாதுகாப்பு ஏற்பாட்டை செய்கிறது.
இதன்படி சிதம்பரம் இருக்கும் சிறையில் 24 மணி நேரமும் 7 சிறைக் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அங்கு ஒரு ஜெயிலரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார். இவ்வாறு ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் அடிப்படையில் 20 காவலர்கள் பிரத்யேகமாக சிதம்பரத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
மேலும் படிக்க: தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய சிறை திகார்
திகாரில் பிறந்தநாள்
ப. சிதம்பரம் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி வரை சிறையில் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுவதால், அவர் செப்டம்பர் 16ஆம் தேதி தனது 74- ஆவது பிறந்தநாளன்றும் திகார் சிறையில் இருக்கும் நிலையேற்பட்டுள்ளது.
திகார் சிறை சென்ற தமிழக அரசியல்வாதிகள்
நாட்டை உலுக்கிய 2 ஜி அலைக்கற்றை ஊழல் புகார் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, 2011, பிப்ரவரி முதல் 16 மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கனிமொழி 2011, மே முதல் 6 மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 2017, ஏப்ரல் 27- ஆம் தேதி முதல் 35 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிதம்பரம் கைதான அதே ஐஎன்எஸ் மீடியா வழக்கில், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் 2018- இல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால், 11 நாள்களில் அவர் விடுவிக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.