ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது 74-ஆவது பிறந்தநாளை திங்கள்கிழமை கொண்டாடினார் ப.சிதம்பரம். இதையடுத்து அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
இந்நிலையில், பிறந்தநாள் தொடர்பாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது,
எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவரின் வாழ்த்தையும் எனது குடும்பத்தினர் என்னிடம் கொண்டு வந்து சேர்த்தனர். உங்களால் தான் எனக்கு 74 வயது என்பதை உணர்ந்தேன். ஆனால், மனதளவில் எனக்கு 74 வயது குறைந்ததாகவே உணர்கிறேன்.
இந்த நேரத்தில் எனது வயதை விட எனக்கு இருக்கும் மிகப்பெரிய கவலையெல்லாம் நாட்டின் பொருளாதாரம் குறித்து தான். ஆகஸ்ட் மாதம் நாட்டின் ஏற்றுமதி -6.05 சதவீதமாக உள்ளது. இது ஒன்றே அதற்கு போதுமான சாட்சி.
எந்தவொரு நாட்டின் பொருளாதார நிலையும் 8 சதவீதத்தை எட்டுவதற்கு அதன் ஏற்றுமதி ஒவ்வொரு ஆண்டுக்கும் 20 சதவீதமாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். கடவுள் தான் இந்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.