நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்குகளின் விசாரணை நிலை குறித்து அறிக்கை அளிக்குமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஏலமுறையில் நிலக்கரி சுரகங்களை ஒதுக்குவதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதிக தொகைக்கு ஏலம் கேட்ட நிறுவனங்களுக்கு பதிலாக குறைந்த விலை கொடுத்த நிறுவனங்களுக்கு முறைகேடாக நிலக்கரி சுரங்கம் தோண்டும் பணி அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் ரூ.1,86,000 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல் தேசத்தையே அப்போது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் தொடர்புடைய நிறுவனங்கள், அதன் உரிமையாளர்கள் மற்றும் ஊழலில் தொடர்புடைய அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த வழக்குகளை விசாரித்து வந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறி தன்னார்வ அமைப்பான காமன் காசஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளின் விசாரணை நிலை அறிக்கையை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வரும் 27-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.