சந்திரயான்-2 திட்டத்துக்கு பின்னடைவு: இறுதி நிமிடத்தில் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு துண்டிப்பு

 சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரிந்து நிலவை நெருங்கி சுற்றிவந்த விக்ரம் லேண்டர், தரையிறங்கும்போது  பெங்களூரில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் விக்ரம் லேண்டருக்குமான தொடர்பு
பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் விஞ்ஞானிகள்.
பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் விஞ்ஞானிகள்.

சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரிந்து நிலவை நெருங்கி சுற்றிவந்த விக்ரம் லேண்டர், தரையிறங்கும்போது  பெங்களூரில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் விக்ரம் லேண்டருக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.  இதனால் விஞ்ஞானிகளும் இஸ்ரோ தொழில்நுட்பக் குழுவினரும்  கவலைக்குள்ளாயினர். கட்டுப்பாட்டு மையத்தில் சிலர் கண்ணீர் விட்டு அழுததையும் காண முடிந்தது.

லேண்டர் தரையிறங்குவதை திரையில் பார்வையிடுவதற்காக பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, லேண்டர் தரையிறங்கியபோது  சிக்கல் ஏற்பட்டதை அடுத்து விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு  அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

கடைசி நிமிடங்கள்: விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கு முன்னதாக, அதிலுள்ள கருவிகளும், அதனுள் வைக்கப்பட்டிருந்த பிரக்யான் ரோவர் பகுதியில் உள்ள பாகங்களும் சரியாக இயங்குகின்றனவா என்பதை, தரைக் கட்டுப்பாட்டிலிருந்தபடி விஞ்ஞானிகள்  சோதனை செய்துபார்த்து, அனைத்தும் சிறப்பாக இயங்குவதை உறுதிசெய்தனர்.

அதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை அதிகாலை 1.00 மணிக்கு மேல் லேண்டரை தரையிறக்குவதற்கான முயற்சியை விஞ்ஞானிகள் தொடங்கினர்.
அதாவது, லேண்டரில் உள்ள புதிய என்ஜின்கள் இயக்கிவைக்கப்பட்டு, லேண்டரின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். 

மேலும், கடைசி நிமிடங்களில் லேண்டர் எடுத்த புகைப்படங்களுடன், ஏற்கெனவே இஸ்ரோவிடம் உள்ள தென்துருவ புகைப்படங்கள் ஒப்பீடு செய்யப்பட்டு, அதைத் தரையிறக்கும் இடத்தை விஞ்ஞானிகள் இறுதி செய்தனர்.

பின்னர் அதிகாலை 1.40 மணியளவில் லேண்டரை தரையிறக்குவதற்கான இறுதிக்கட்ட முயற்சியைத் தொடங்கினர். அப்போது விநாடிக்கு 1.6 கி.மீ. வேகத்தில் சுற்றிவந்த லேண்டரின் வேகம், பூஜ்ஜியம் கி.மீ. அளவுக்கு குறைக்கப்பட்டது. இதற்காக லேண்டரில் பொருத்தப்பட்டிருந்த புதிய சென்சார்களை விஞ்ஞானிகள் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்து, வேகத்தைக் கட்டுப்படுத்தினர்.

இந்த ஒவ்வொரு கடைசிக் கட்ட நிகழ்வும் திட்டமிட்டபடி நடைபெற்றதை, விஞ்ஞானிகள்  கைதட்டி வரவேற்றனர்.

சிக்கல்: ஆனால், நிலவின் தரை பரப்புக்கு மேல் 2.1 கி.மீ. உயரத்தில்  இறங்கிக்கொண்டிருந்த லேண்டருக்கும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.  இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

என்ன காரணத்தால் இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிலவை 100 கி.மீ. தொலைவில் சுற்றிவரும் ஆர்பிட்டர் பகுதி ஓராண்டுக்கு இயங்கி, நிலவை புகைப்படம் எடுத்து தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து அனுப்பும்.
இந்த ஆர்பிட்டர்  எடுக்கும் புகைப்படங்களைக் கொண்டு விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்பது ஆய்வு செய்து கண்டுபிடிக்க முடியும்.

நம்பிக்கை இழக்காதீர்கள்: மோடி
பெங்களூரு இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகளிடையே பிரதமர் மோடி பேசியதாவது:

இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி.
இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி.


நமது விஞ்ஞானிகளின் அளப்பரிய சாதனையை எண்ணி இந்திய நாடே பெருமைகொள்கிறது. வாழ்க்கையில் வெற்றியும், தோல்வியும் சகஜம். நம்பிக்கை இழக்க வேண்டாம்.   தைரியமாகச் செயலாற்றுங்கள். மேலும் உத்வேகத்துடன் பணியாற்றுங்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com