லக்னௌ: கரோனா பரவி வரும் நிலையில், நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் திறந்த கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், அடிப்படை இல்லாமல், வேலை நிமித்தமாக வெளியே பொதுமக்கள் வரும் போது தேர்வு எழுத மட்டும் மாணவர்கள் வர முடியாதா என்று பாஜக அடிப்படை இல்லாமல், விளையாட்டுத்தனமாக கேள்வி எழுப்புகிறது. ஆனால், பொதுமக்கள் வேறு வழியே இல்லாமல்தான் பணிக்காக வெளியே வருகிறார்கள். ஆனால், தங்கள் பாதுகாப்புக்காக வீட்டுக்குள்ளேயே இருப்போரையும் தேர்வு மூலமாக மத்திய அரசு வெளியே வர கட்டாயப்படுத்துகிறது.
ஒருவேளை மாணவர்களுக்கு கரோனா தொற்று பரவினால், அதற்கான பொறுப்பை யார் ஏற்பது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் 13-ம் தேதியும், ஜேஇஇ தேர்வு செப்டம்பர் 1 - 6-ம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், இந்த தேர்வுகளை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலையையே எதிர்க்கட்சிகளும் எடுத்துள்ளன.