/

கனடா திரும்பாமல் விவசாயிகளின் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலதிபர்

கனட தொழிலதிபர் ஒருவர் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக தில்லி போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார்.

News image
கனடா திரும்பாமல் விவசாயிகளின் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலதிபர்
Updated On :27 ஜனவரி 2024, 6:12 pm

DIN

கனட தொழிலதிபர் ஒருவர் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார்.

ஒரு வாரத்தில் கனடா திரும்ப வேண்டிய நிலையில், விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக கனடா செல்வதை அவர்  ஒத்திவைத்துள்ளார்.

பஞ்சாபை பூர்விகமாக கொண்ட குருபாக் சிங்  என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக கனடாவின் டொரொண்டோ நகரில் தங்கி சுயமாக தொழில் செய்து வருகிறார். இதனிடையே கடந்த வாரம் இந்தியாவிற்கு அவர் திரும்பியுள்ளார். அவ்வபோது இந்தியாவிற்கு வருவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் கடந்த வாரம் அவர் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.

பஞ்சாபின் நவா ஷார் பகுதியில் பாரம்பரியம் மிக்க இல்லத்தைக் கொண்டிருந்தாலும், அதனை விடுத்து தில்லி எல்லையில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை வருகை புரிந்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குரல்கொடுத்து வருகிறார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, ''விவசாயிகளின் போராட்டத்தை அறிந்து அதில் பங்கெடுப்பதற்காக கனடாவிலிருந்து கடந்த வாரம் இந்தியாவிற்கு வந்தேன். 

விவசாயிகளின் நில உரிமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். எனது பாரம்பரிய விவசாய நிலத்திற்காகவும் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளேன்.

அடுத்த வாரம் கனடா செல்வதற்காக பயணச்சீட்டுகளை ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தாலும், விவசாயிகளின் போராட்டத்தைக் கண்ட பிறகு அந்த முடிவைக் கைவிட்டேன். போராட்டக்களத்தில் நானும் இருக்க வேண்டும்.

நான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் மட்டும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. நாட்டின் மிக முக்கிய குடிமக்களான விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதால் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்றுள்ளேன்.

அரசு மற்றும் விவசாயிகளிடையே பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. நல்ல முடிவுக்காக காத்திருக்கிறோம்'' என்றார்.

விவசாயத்துறையில் சீர்திருத்தத்தை மேற்கொள்ளவும், விவசாயிகள் தங்களது பொருள்களை நேரடியாக விற்பனை செய்யவும் புதிய வேளாண் சட்டங்கள் வழிவகுக்கும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஆனால், இந்த சட்டங்கள் குறைந்தபட்ச ஆதார விலைக்கு பாதகமாக அமையும் என்ற முழக்கங்களை எழுப்பி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 29-வது நாளாக (டிச. 24) தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.