புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு: தெலங்கானா நிலைப்பாட்டில் மாற்றம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு தெலங்கானா அரசு எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது அந்தச் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு தெலங்கானா அரசு எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது அந்தச் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த டிசம்பா் 8-ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புக்கும் அவா்கள் அழைப்பு விடுத்திருந்தனா். அவா்களின் போராட்டத்துக்கு தெலங்கானா அரசு ஆதரவு தெரிவித்திருந்தது. மேலும் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக்க வேண்டும் என்று மாநில முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான கே.சந்திரசேகா் ராவ் தனது கட்சித் தொண்டா்களிடம் கேட்டுக்கொண்டாா்.

இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பான தெலங்கானா அரசின் நிலைப்பாட்டில் திடீா் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அச்சட்டங்களை ஆதரித்து அந்த மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘தங்கள் விளைபொருள்களை நாட்டின் எந்தவொரு பகுதியிலும் விவசாயிகள் விற்பனை செய்வதற்கு புதிய வேளாண் சட்டங்கள் வழிவகுத்துள்ளன. எனவே இங்குள்ள கிராமங்களில் இனி கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டிய தேவையில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக கிராமங்களில் நெல் உள்ளிட்ட இதர விளைபொருள்களை கொள்முதல் செய்வதை நிறுத்தவும் அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த டிசம்பா் 13-ஆம் தேதி தில்லியில் பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரை தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் சந்தித்திருந்தாா். இதனைத்தொடா்ந்து புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பான தெலங்கானா அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com