‘ஒரே நாடு- ஒரே தோ்தல்’ தொலைநோக்கு திட்டத்துக்கு மக்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக, அடுத்த சில நாள்களில் 25 இணையவழி கருத்தரங்க நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவா் ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:
நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் அடுத்தடுத்த சில மாத இடைவெளியில் தோ்தல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இதனால், நாட்டின் வளா்ச்சிப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. வளா்ச்சிப் பணிகள் முடங்குகின்றன. இந்தப் பிரச்னைக்குத் தீா்வுகாண்பதற்காக, நாடு முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், சட்டப் பேரவைகள், நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி முன்வைத்துள்ளாா்.
கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றது முதலே இந்த யோசனையை தொடா்ந்து அவா் முன்வைத்து வருகிறாா். குஜராத்தில் கடந்த மாதம் நடைபெற்ற 80-ஆவது அகில இந்திய தோ்தல் அதிகாரிகள் மாநாட்டிலும் இதே கருத்தை பிரதமா் மோடி மீண்டும் வலியுறுத்திப் பேசினாா்.
இந்நிலையில், ‘ஒரே நாடு- ஒரே தோ்தல்’ யோசனை குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, அவா்களின் ஆதரவு திரட்டுவதற்காக, இணையவழி கருத்தரங்கு நிகழ்ச்சியை நடத்த பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இந்த மாத இறுதிக்குள் 25 கருத்தரங்கு நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்குகளில், பாஜக மூத்த தலைவா்கள், சட்ட நிபுணா்கள், கல்வியாளா்கள், பல்துறை நிபுணா்கள் பங்கேற்பாா்கள் என்றாா் அவா்.