கொல்கத்தா: புல்வாமாவில் நினைவுச் சின்னம் தேவை இல்லை என்று மார்க்சிஸ்ட் தலைவர் முகமது சலீம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச் செய்து, ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த கண்டனங்களை எழுப்பியது. அந்த கோர சம்பவத்தின் முதலாவது ஆண்டு நினைவு நாள் வெள்ளியன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் புல்வாமாவில் நினைவுச் சின்னம் தேவை இல்லை என்று மார்க்சிஸ்ட் தலைவர் முகமது சலீம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளியன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நமது திறமையின்மையை நினைவு கூர்வதற்காக புல்வாமாவில் நமக்கு நினைவுச் சின்னம் தேவை இல்லை. நமக்குத் தெரிய வேண்டியது எல்லாம், எப்படி 80 கிலோ ஆர் டி.எக்ஸ் வெடிபொருளானது சர்வதேச எல்லைகளைக் கடந்து, உலகில் அதிக அளவு ராணுவ மயமாக்கப்பட்ட ஒரு பகுதிக்குள் நுழைந்து வெடிக்கச் செய்யப்பட்டது என்பதுதான். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.