புது தில்லி: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) தலைவராக ராஜேந்திர குமார் பொறுப்பேற்ற பின் முதல் கூட்டம் செவ்வாயன்று தில்லியில் நடைபெற்றது.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைத்த பிறகு நடைபெறும் ஐந்தாவது கூட்டம், தில்லி ராமகிருஷ்ணா புரத்தில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதிய தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் இந்தக் கூட்டம் தொடங்கியது. இதில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் தலைவர் நவீன் குமார் கலந்து கொண்டார். தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் பட்டாபிராமன், திருச்சி மண்டல உதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சித்துறை ஆணையரும், கல்வித்துறைச் செயலருமான ஏ. அன்பரசு, மற்றும் கேரளம், கர்நாடக மாநில உயரதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆணையத்தின் அடுத்தக் கூட்டம் ஜுன் மாதம் 25-ஆம் தேதி நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தினை தொடர்ந்து மாலை 3 மணி அளவில் காவிரி ஒழுங்காற்றுக்குழு (CWRC) 26-ஆவது கூட்டம், அக்குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பாக திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் பட்டாபிராமன், திருச்சி மண்டல உதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.