பள்ளி முதல்வருக்கு எதிராக திருவனந்தபுரத்தில் வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பரமு பிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளியில், பள்ளியின் முதல்வரும், மேலாளருமான ஜோதிஷ்மதி சில வேடிக்கையான காரணங்களுக்காக மாணவர்களை துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் திடீரென வகுப்பறைக்குள் நுழைந்து திட்டுவார் என்று மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, பள்ளி மாணவர்கள் இன்று திடீரென வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பள்ளி சீருடைகளை எரித்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதே பள்ளியில் ஒரு தலித் சிறுமி தலைமுடியை வெட்டாததற்காக பள்ளி நிர்வாகம் தண்டனை வழங்கியது. இந்த சம்பவத்தில், பள்ளி நிர்வாகத்தின் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டதாக மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும், மாணவர்களின் இந்தப் போராட்டத்திற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.