

புது தில்லி: இந்திய அரசால் 59 சீன செயலிகள் தடை செய்யப்பட்ட விவகாரத்தின் தொடர்ச்சியாக, தனது சீன சமூக ஊடகக் கணக்கினை பிரதமர் மோடி நீக்கியுள்ளார்.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக, செல்லிடப்பேசி மற்றும் இதர மின்னணு கருவிகளில் பயன்படுத்தக் கூடிய 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு திங்களன்று உத்தரவிட்டுள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள அந்த செயலிகளில், பரவலாக பயன்படுத்தப்படக் கூடிய "டிக்டாக்', "ஷேர் இட்', "கேம் ஸ்கேனர்' உள்ளிட்ட செயலிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விவகாரத்தின் தொடர்ச்சியாக, தனது சீன சமூக ஊடகக் கணக்கினை பிரதமர் மோடி நீக்கியுள்ளார்.
சீனாவில் சமூக ஊடகங்களுக்கு அரசின் கட்டுபாடுகள் மிக அதிகம் என்பதால் அங்கு கூகுள், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சர்வதேச சமூக ஊடகங்கள் செயல்படவில்லை. அதற்கு பதிலாக வேறு சில செயலிகளை சீன நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. அதில் வெய்போ என்பது ட்விட்டருக்கு இணையான சமூக ஊடகமாகும்.
கடந்த 2015-ஆம் ஆண்டு தனது சீன பயணத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி வெய்போவில் கணக்குத் துவங்கினார். அவரது கணக்கினை 2.44 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
தற்போது 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு திங்களன்று உத்தரவிட்டதன் தொடர்ச்சியாக, தனது வெய்போ கணக்கினை பிரதமர் மோடி நீக்கியுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்தவர்களது கணக்கினை வெய்போவில் அவ்வளவு எளிதாக நீக்குவது இயலாது என்பதால் அதற்கான நடைமுறைகள் திங்களன்றே முடுக்கி விடப்பட்டன.
இதன்காரணமாக அவரது கணக்கில் உள்ள செய்திகள், புகைப்படங்கள் மற்றும் அவர் இட்ட பின்னுட்டங்கள் என அனைத்தும் நீக்கப்பட்டு விடும்.
முன்னதாக கடந்த மாதம் எல்லைப் பிரச்சினை குறித்து மோடி கூறிய கருத்துகள் அனைத்தும் சீன அரசின் ஊடக கண்காணிப்பின் காரணமாக சீன சமூக ஊடக பரப்பில் இருந்து நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.